வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து கடந்த 5 நாட்களாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மழைக் காலங்களில் ஏற்படும் டெங்கு, காலரா உள்ளிட்ட நோய்களை தடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் 10 வாரங்களில் 10,000 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வடகிழக்கு பருவமழையானது கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. இதனால், கடந்த 5 நாட்களாகவே நன்றாக மழை பெய்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் இந்த மழை காலங்களில் தான் நோய் பாதிப்புகள் அதிகமாக இருக்கும். குறிப்பாக டெங்கு, மலேரியா, காலரா, சேற்றுப்புண் மற்றும் சளி நோய்கள் போன்ற பாதிப்புகள் இந்த மழைக்காலங்களில் தான் ஏற்படும்.
இந்த நோய்கள் மழைக்காலத்தில் தவிர்க்க முடியாதவை. ஏனெனில், மழைக்காலங்களில் கொசுக்களின் உற்பத்தி அதிகரிக்கும். சாலைகள் மற்றும் வீடுகளை சுற்றி தேங்கியிருக்கும் தண்ணீரில் கொசுக்கள் உருவாகின்றன. குறிப்பாக ஏடிஸ் கொசுக்கள் நல்ல தண்ணீரில் தான் உருவாகும். இதன் மூலமே டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் பரவுகின்றன. தமிழ்நாட்டை பொறுத்தவரை டெங்கு என்பது பெருமளவில் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இந்தாண்டில் 10 மாதங்களில் மொத்தம் 5 ஆயிரத்து 600 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
மேலும், 492 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 5 நபர்கள் இறந்துள்ளனர். இந்நிலையில், அடுத்த இரண்டு மாதங்களில் அதிகளவில் பாதிப்புகள் ஏற்படும் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் டெங்கு பாதிப்பு 8,000 முதல் 10,000 வரை செல்லும். அதிகபட்சமாக 2012இல் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டு 66 பேர் உயிரிழந்தனர்.