தென்னிந்தியாவில் வெப்பம் குறைவாக இருக்கும் கோடை கால சுற்றுலா தளங்கள் நிறைந்த இடம் என்றால் கேரளாவை சொல்லலாம். சுவையான உணவு, வளமான கலாச்சாரம், பரந்து விரிந்த மலைவாசஸ்தலங்கள், படகு இல்லங்கள் உள்ளிட்ட இடங்கள் கேரளாவிற்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. இந்த கோடை விடுமுறையில் கேரளாவில் பார்க்க வேண்டிய இடங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

அரபிக்கடலின் கரையில் அமைந்து இருப்பதால் இந்த இடத்தில் இருந்து சூரிய உதயத்தை பார்க்க முடியாது. ஆனால், கடலில் மூழ்கும் நெருப்பு பிழம்பு போன்ற சூரிய அஸ்தமனத்தை பார்க்கலாம். வர்கலா, கோவளம், கோழிக்கோடு, மராரி மற்றும் ஆலப்புழா ஆகியவை சிறந்த சன்செட் ஸ்பாட்களாகும். அதுவும் வர்கலா கடல் பகுதியில் இப்போது டால்பின்கள் வருகை தந்திருப்பதால் அது கடலில் துள்ளி குதிக்கும் காட்சிகளை மிஸ் செய்து விடாதீர்கள். கேரளாவின் பெரும்பாலான மலைகள் தேயிலை தோட்டங்களால் மூடப்பட்டிருக்கும். தமிழக எல்லை பகுதிகளில் இருந்து பக்கத்திலேயே இருக்கும் மூணாறு, வயநாடு, தேக்கடி, இடுக்கி, வாகமன், சைலண்ட் வேலி மற்றும் அதிரப்பிள்ளி போன்ற இடங்களை சுற்றிப் பார்க்கலாம்.
கேரளாவின் மலை பகுதிகளில் பாராகிளைடிங், மலை ஏறுதல், பாறைகளில் ஏறுதல், மூங்கில் ராஃப்டிங், ஸ்நோர்க்லிங், ஸ்குபா டைவிங் போன்ற சாகச விளையாட்டுகளும் உள்ளன. அதேபோல இங்குள்ள நீர் நிலைகளில் தனியாக காயக்கிங் எனப்படும் படகு சவாரியையும், தேக்கடி போன்ற இடங்களில் உள்ள ஏரிகளில் மூங்கில் ராஃபிட்டிங் பயணங்களையும் மேற்கொள்ளலாம். இங்கு வளரும் இயற்கையான மூங்கில்களை வைத்து பாரம்பரியமாக தயாரிக்கும் மிதவைகளில் பயணிக்கும் அனுபவம் வேறு எங்கும் கிடைக்காது.
கேரளப் பயணத்தை நீங்கள் மகிழ்ச்சியாகக் கழிக்க விரும்பினால், அதில் முக்கியமாக இருக்க வேண்டியது இங்குள்ள உப்பங்கழியில் படகுப் பயணம் தான். நாட்டின் அதிகப்படியான பேக்வாட்டர் என்று சொல்லப்படும் உப்பங்கழிகளில் ஒரு படகு இல்லத்தை வாடகைக்கு எடுத்து அதில் தங்கி, பயணித்துக் கொண்டே ஊரை ரசிப்பது தனி அனுபவம். படகு பயணத்தின் போது, சுற்றியுள்ள நெல் வயல்களையும், வனவிலங்குகளையும், இயற்கை சூழலையும் ரசிக்கலாம். கேரளா என்பது போர்த்துகீசியர்கள் மற்றும் ஆங்கிலேயர்களால் காலனித்துவப்படுத்தப்பட்ட பகுதி என்பதால் ஐரோப்பிய பாணியிலான கட்டிடங்களும் நகரங்களும் அதிகம் உள்ளன. முக்கியமாக போர்ட் கொச்சி ஒரு அழகான கடற்கரை நகரமாகும், இது ஒரு காலத்தில் டச்சு, போர்த்துகீசிய ஆட்சியின் கீழ் இருந்தது.
அது போக மட்டாஞ்சேரி அரண்மனை, எடக்கல் குகைகள், பேக்கல் கோட்டை, செயின்ட் மேரிஸ் தேவாலயம், கிருஷ்ணாபுரம் அரண்மனை ஆகியவை புகழ்பெற்ற பாரம்பரிய தளங்களாகும். இது தவிர, பத்மநாதபுர அரண்மனை, குருவாயூர் கோவில், கோழிக்கோடு கோட்டை உள்ளிட்ட இடங்களை சுற்றிப் பார்க்கலாம். அதேபோல கேரளா உணவுகள் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. அப்பம், புட்டு- கடலை கறி, இடியாப்பம் இங்கு மிகவும் பிரபலமானவை. இங்குள்ள அசைவ உணவுகள் கரிமீன் பொழிச்சது, மீன் மாங்கா கறி, கோஜி பொரிச்சது எல்லாம் நிச்சயம் சாப்பிட்டு பார்க்க வேண்டியது. இது தவிர பத்திரி, எரிச்சேரி, ஓலன், உள்ளி தேய்த்தல், வெள்ளரிக்காய் கிச்சடி போன்ற சைவ உணவுகளும் பலா பாயசம், சட்டி பத்திரி, அடப்ரதமன் போன்ற சில சுவையான இனிப்பு வகைகளை சுவைப்பதற்காகவே கண்டிப்பாக கேரளாவுக்குச் செல்லலாம்.