ஆன்லைன் கடன் செயலியில் கடன் வாங்குபவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நாளுக்கு நாள் சீன கடன் செயலியில் ஏற்படும் மோசடி வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இருப்பினும், மத்திய உள்துறை அமைச்சகம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் சீன கட்டுப்பாட்டில் உள்ள கடன் நிறுவனங்களின் தொல்லைகள் மற்றும் பணம் பறிக்கும் கடுமையான முறைகளால் பல தற்கொலை சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
![மொபைல் செயலியில் கடன் வாங்குபவர்களா நீங்கள்..? என்ன நடக்கும் தெரியுமா..? மத்திய அரசு எச்சரிக்கை...!](https://1newsnation.com/wp-content/uploads/2022/10/Loan-app-1024x614.jpg)
இந்த விவகாரம் தேசிய பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் குடிமக்களின் பாதுகாப்பு ஆகியவற்றில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இப்படி கடன் வாங்கும் நிறுவனங்கள் தொடர்புகள், இருப்பிடம், புகைப்படம் மற்றும் வீடியோக்கள் போன்ற ரகசிய தனிப்பட்ட தரவுகளை பயன்படுத்தி கடன் வாங்குபவர்களை துன்புறுத்துகின்றனர். நாடு முழுவதும் ஏராளமானோர் உயிரிழந்துள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடன் வாங்கும் போது அந்த நபர்கள் மொபைல் நம்பர் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வழங்க வேண்டும். அதன் பிறகு விவரங்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு திட்டமிடப்பட்ட சைபர் குற்றம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ள நிலையில், மக்கள் அனைவரும் இதில் கவனமுடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.