தமிழ்நாடு வஃக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட சென்னை மாவட்டத்தில் உள்ள வஃக்பு நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் புதிய இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், இந்த திட்டத்தின் கீழ் மொத்த விலையில் ரூ.25 ஆயிரம் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் இதில் எது குறைவோ அத்தொகையினை மானியமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இருசக்கர வாகனம் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய Gearless / Auto Gear கூடிய எஞ்சின் 125 CC சக்திக்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் விண்ணப்பிப்பவர்கள் வஃக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட வஃக்பு நிறுவனங்களில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றிருக்க வேண்டும். மேலும், தமிழ்நாட்டை சேர்ந்தவராகவும், 15 வயது முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும் என்றும் எல்.எல்.ஆர். சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பவர்கள் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வருமான சான்று, புகைப்படம், ஒட்டுநர் உரிமம் / L.L.R சான்று, வயது சான்றிதழ், வங்கிக்கணக்கு புத்தகத்தின் முதல்பக்க நகல், சம்பந்தப்பட்ட முத்தவல்லியிடம் எத்தனை ஆண்டுகள் வஃக்பு வாரியத்தில் பணிபுரிகிறார் என்பதற்கான சான்று பெற்று மாவட்ட வஃக்பு கண்காணிப்பாளர் மேலொப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனம் வாங்குவதற்கான விலைப்புள்ளி இணைக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட வக்ஃபு நிறுவனத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் மானிய உதவி கோரி விண்ணப்பம் செய்தால் 1. பேஷ் இமாம், 2. அரபி ஆசிரியர்கள், 3. மோதினார், 4. முஜாவர் என்ற முன்னுரிமையின் அடிப்படையில் ஒருவருக்கு மட்டும் மானியத் தொகை வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் உலமாக்கள், சென்னை-1, இராஜாஜி சாலையில் உள்ள சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், 2-வது தளத்தில் இயங்கும், மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் படிவத்தை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.