மழைக்காலம் தொடங்கிவிட்டாலே நோய்களும் வரிசைகட்டத் தொடங்கிவிடும். தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதே நேரத்தில் இன்ஃப்ளுயன்சா காய்ச்சலும் பரவி வருகிறது. குறிப்பாக, குழந்தைகள் இந்தக் காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் 100-க்கும் மேற்பட்டோருக்கு இன்புளுயன்சா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வைரஸ் தொற்று வேகமாக பரவுவதன் காரணமாக முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இன்புளுயன்சா தொற்று வேகமாக பரவியது. இந்நிலையில், இன்புளுயன்சா தொற்று தமிழகத்துக்கும் மீண்டும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
இன்புளுயன்சா என்பது வைரஸ் காய்ச்சல். பருவநிலை மாற்றம் காரணமாக இந்தக் காய்ச்சல் பரவுகிறது. மழைக் காலத்தில் இந்தக் காய்ச்சல் பாதிப்பு தொடங்கி வெயில் காலத்தில் குறைந்து விடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சளி, காய்ச்சல், தொண்டை வலி, இருமல் இந்தக் காய்ச்சலின் அறிகுறிகளாக கருதப்படுகிறது. சிலருக்கு அறிகுறிகளே இல்லாமல் கூட இருக்கலாம். லேசான காய்ச்சல் தொடங்கி தீவிர காய்ச்சல் பாதிப்பு ஏற்படலாம். இதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா பாதிப்புக்கு கடைபிடித்த முன்னெச்சரிக்கை வழிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதாவது கூட்டம் அதிகமாக உள்ள இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லக் கூடாது. பெரியவர்களும் அவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியில் செல்ல வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டியது அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.