விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கைது செய்யப்பட்டார்..
வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பணவீக்கம், விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்து காங்கிரஸ் கட்சி இன்று நாடு தழுவிய போராட்டம் நடத்தி வருகிறது.. எனினும் டெல்லியில் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி வழங்கவில்லை. மேலும், ஜந்தர் மந்தர் தவிர டெல்லியின் அனைத்து இடங்களிலும் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தடையை மீறி நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கருப்பு உடையணிந்து போராட்டம் நடத்தினர்.. மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் முழக்கங்களை எழுப்பினர்.. இதையடுத்து அவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து குடியரசு தலைவர் மாளிகைக்குக் பேரணியாக சென்ற நிலையில், காவல்துறையினர் அவர்களை தடுத்தி நிறுத்தினர்.. மேலும் போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்றும் உடனடியாக கலைந்து செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினர்..
ஆனால் அதை ஏற்காத ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் சுமார் 20 நிமிடங்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.. இதையடுத்து ராகுல்காந்தி உள்ளிட்டோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.. அவர்கள் தற்போது தடுப்பு காவலில் உள்ள நிலையில், இன்று மாலை ராகுல்காந்தி விடுவிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது..
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விலை உயர்வு மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது..