“கலைஞரின் கனவு இல்லம்” திட்டத்தின் கீழ் வீடு கட்ட யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மறந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டித் தரும் திட்டத்தை 1975ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார். இதையடுத்து, 2010ஆம் ஆண்டு குடிசையில்லா மாநிலம் என்ற இலக்கை எட்டும் வகையில், கலைஞரின் வீடு வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வகையில், 8 லட்சம் குடிசை வீடுகளில் மக்கள் வசித்து வருவது கண்டறியப்பட்டது. 2030-க்குள் ஊரக பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தர தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
முதற்கட்டமாக ரூ.3,500 கோடியில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படவுள்ளன. ஒரு வீட்டிற்கு ரூ.3.50 லட்சம் வீதம் அரசு நிதி கொடுக்கும். இந்த மூன்றரை லட்சமும் ஒரே தவணையாக கொடுக்காமல் 4 தவணைகளாக பிரித்துக் கொடுக்கப்படும். இப்பணம் நேரடியாக பயனாளியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
சொந்தமாக பட்டா வைத்திருந்தால் மட்டுமே இத்திட்டத்தில் பயன்பெற முடியும். கான்கிரீட் வீடுகளை பெற குறைந்தபட்சம் 360 சதுர அடி நிலம் இருக்க வேண்டும். அதில் 300 சதுர அடிக்கு கான்கிரீட் வீடு கட்ட வேண்டும். புதிய வீடுகள் அனைத்தும் சிமெண்ட் மூலம் மட்டுமே கட்டப்பட வேண்டும். மண் சுவர், மண் சாந்து மூலம் கட்டப்படக் கூடாது. புறம்போக்கு இடத்தில் குடிசை போட்டிருந்தால், அவர்கள் இத்திட்டத்தில் பயன்பெற முடியாது.
சொந்தமாக பணம் போட்டு கான்கிரீட் வீடு கட்டி இருப்பவர்களுக்கும் இத்திட்டம் பொருந்தாது. கலைஞர் திட்டத்தில் வீடு கட்டுவதற்கு சிமெண்ட், கம்பி வழங்கப்படும். ரூ 3.50 லட்சத்தில் ரூ.3.10 லட்சம் 4 தவணைகளாக வழங்கப்படும். மீதமுள்ள 40 ஆயிரத்திற்கு கட்டுமான பொருட்களாக வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.