நெல்லை மாவட்டம் செட்டிகுளம் புதுமனை கிழக்கு தெருவை சேர்ந்தவர் தினேஷ் குமார்(26). இவர் கூடங்குளம் கடலோர காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருகின்றார். இந்த நிலையில், இவர் சமீபத்தில் நடைபெற்ற காவலர் எழுத்து தேர்வில் தேர்வு எழுதி இருக்கிறார், அத்துடன் இவர் அருகே உள்ள தெருவை சார்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், நேற்று முன்தினம் இரவு அவர் காதலித்த பெண்ணுக்கும், அவருக்கும் கருத்து வேறுபாடு உண்டானதாகவும், காவலர் தேர்வு சரியாக எழுதாத காரணத்தால் அவர் மன வேதனையில் இருந்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, மனம் நொந்த தினேஷ்குமார் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவலை கேள்விப்பட்டவுடன் ஏற்பட்ட துக்கத்தால் கதறி அழுத தினேஷ்குமாரின் சித்தப்பா மகன் வெங்கடேஷ் என்பவர் நெஞ்சுவலி காரணமாக மயக்கமடைந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள் உறவினர்கள்.
அங்கே அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வெங்கடேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். அண்ணன் இறந்த துக்கம் தாளாமல் கதறியழுத தம்பி நெஞ்சுவலியால் உயிரிழந்த சம்பவம் செட்டிகுளம் பகுதியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.