அமெரிக்கா சென்றுள்ளா பிரதமர் மோடியை கிரைம் மினிஸ்டர் ஆஃப் இந்தியா என்று விமர்சித்து டிஜிட்டல் டிரக் முக்கிய சாலைகளில் வலம் வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 3 நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். செவ்வாய்கிழமை நியூயார்க் நகருக்கு சென்றடைந்த அவர், நாளை வரை அங்கு தங்கி இருக்கிறார். இந்திய பிரதமராக மோடி பதவியேற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. இதற்கு இடைபட்ட காலத்தில் 5 முறை அமெரிக்காவுக்கு அவர் பயணித்துள்ளார்.
ஒபாமா, டொனால்டு டிரம்ப், ஜோ பைடன் என 3 அதிபர்கள் அமெரிக்காவில் மாறிவிட்ட நிலையில், தற்போது அவர் மேற்கொண்டு இருப்பதே முதல் அரசு முறை பயணமாகும். இந்த பயணித்தில் அமெரிக்க அரசின் விருந்தாளியாக அவர் கருதப்பட்டு உயரிய அந்தஸ்துடன் கவனிக்கப்படுவார். முதலில் நியூயார்க் நகருக்கு சென்ற அவர், அங்கு வசிக்கும் இந்தியர்கள், தொழிலதிபர்கள் எலான் மஸ்க் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். இன்று வெள்ளை மாளிகை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரதமர் மோடிக்கு இரவு விருந்தை வழங்க உள்ளார். இந்நிலையில், பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்தியாவில் நடந்து வரும் மனித உரிமை மீறல்கள், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள், மதவாத மோதல்கள், இணையதள முடக்கம், கருத்து சுதந்திரம் பறிப்பு, பத்திரிகை சுதந்திர பறிப்பு, மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் போன்ற பல்வேறு விவகாரங்களை சுட்டிக்காட்டி பல்வேறு தரப்பினர் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியாவில் நடக்கும் இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல்களை கண்டித்து வெள்ளை மாளிகை இரவு விருந்தில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு விடுத்த அழைப்பை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திரும்பப்பெற வலியுறுத்தி இந்தியன் அமெரிக்கன் முஸ்லிம் கவுன்சில் என்ற அமைப்பு அமெரிக்காவில் கையெழுத்து இயக்கத்தை நடத்தியது.
இந்நிலையில், இந்தியாவில் நடந்து வரும் மனித உரிமை மீறல்கள், கருத்து சுதந்திரம் போன்றவை குறித்து பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்ப வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு அமெரிக்காவை சேர்ந்த செனடர்கள் உட்பட 75 எம்பிக்கள் கடிதம் எழுதியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்க செனடர் கிரிஸ் வான் ஹோலென் மற்றும் அதன் பிரதிநிதி பிரமிளா ஜெயபால் தலைமையிலான இந்த குழுவில், ஜனநாயக கட்சியின் அதிபர் தேர்தலுக்காக வேட்பாளர் போட்டியில் இருக்கும் பெர்னீ சாண்டர்ஸ், எலிசபெத் வாரன் உட்பட 18 செனடர்கள், 57 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டு இருக்கிறார்கள்.
இதற்கிடையே, பிரதமர் மோடியை கண்டித்து அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் டிஜிட்டல் டிரக்கில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு நிறுவனங்கள், அரசியல் தலைவர்கள், விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படும் இந்த டிரக் நியூயார்க் நகரில் மிகவும் பிரபலம். இதில் இந்தியாவில் நடைபெற்று வரும் சம்பவங்களை சுட்டிக்காட்டி மோடியை விமர்சித்துள்ளனர். காட்டமாக மோடியை, “கிரைம் மினிஸ்டர் ஆஃப் இந்தியா” என அதில் விமர்சிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகள் ஏன் போராட்டம் நடத்துகின்றனர்.? 2005-2014 ஆம் ஆண்டு வரை பிரதமர் மோடி ஏன் அமெரிக்காவுக்கு வர தடை விதிக்கப்பட்டது? எந்த விசாரணையும் இல்லாமல் ஏன் மாணவர் சங்க தலைவர் உமர் காலித் 1000 நாட்களுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்? என பல்வேறு கேள்விகள் அதில் எழுப்பப்பட்டுள்ளது.