திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்துள்ள ஆலந்தாங்கல் கிராமத்தில் வசித்து வருபவர் சக்திவேல். அதே கிராமத்தில் அவர் வீடு ஒன்றை கட்டி வருகிறார். இவருடைய வீட்டுமனை வழியாக மின்சார கம்பி பாதை செல்வதால் வீடு கட்டும் பணி கடந்த ஜனவரி மாதம் தடை பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து மின்சார கம்பி பாதையை அகற்றி கொடுக்க வேண்டும் என்று தெரிவித்து வெம்பாக்கம் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் கோரிக்கை வைத்திருக்கிறார்.
மின்சார கம்பியை அகற்றுவதற்காக திட்ட மதிப்பீடு தொகை 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று மென் பொறியாளர் அஜித் பிரசாத் கேட்டுக் கொண்டிருக்கிறார். அதன் அடிப்படையில் அவரிடம் 50 ஆயிரம் ரூபாய் சக்திவேல் கடந்த மார்ச் மாதம் கொடுத்திருக்கிறார் பணத்தை பெற்றுக் கொண்ட அவர், மின்சார கம்பியை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளாமல் சக்திவேலை அலைக்கழித்ததாக தெரிகிறது.
அதன் பிறகு திட்ட மதிப்பீடு தொகையான 39 ஆயிரத்திற்கு கண்காணிப்பு பொறியாளர் பெயரில் வங்கி வரைவோலை பெற்று வருமாறு தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே 50,000 ரூபாய் கொடுத்து இருப்பதை நினைவு படுத்தியவுடன் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து 39000த்தை கொண்டு வந்து சக்திவேலிடம் உதவி மின் பொறியாளர் அஜித் பிரசாத் கடந்த 17ஆம் தேதி கொடுத்திருக்கிறார். மறுநாள் 39000க்கு வங்கி வரைவோலை எடுத்து வந்து அலுவலகத்தில் சக்திவேல் கொடுத்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, அவரது வீட்டுமனை முன்பு கடந்த 24 ஆம் தேதி 2 மின்கம்பங்கள் இறக்கி வைத்துவிட்டு மேலும் 2000 ரூபாய் கொடுக்குமாறு உதவி முன் பொறியாளர் வலியுறுத்தி இருக்கிறார். அப்போது ஏற்கனவே கொடுக்கப்பட்ட 50 ஆயிரத்து 39 ஆயிரத்துக்கு வங்கி வரைவோலை எடுக்கப்பட்ட பின்னரும் மீதம் 11000 ரூபாய் இருக்கிறது என்று சக்திவேல் தெரிவித்திருக்கிறார். ஆனால் 11000த்தை மற்றொரு அதிகாரியும் எடுத்துக் கொண்டோம். தற்போது 2000 ரூபாய் கொடுத்தால்தான் அடுத்தகட்ட பணிகளை செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார் மின்பொறியாளர்.
கடுப்பான சக்திவேல், இது தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையிடம் புகார் வழங்கியிருக்கிறார். அவர்களுடைய அறிவுரையின் அடிப்படையில் தன்னுடைய அலுவலகத்தில் பணியில் இருந்த உதவி மின் பொறியாளர் அஜித் பிரசித்திடம் 2000 ரூபாயை சக்திவேல் நேற்று கொடுத்திருக்கிறார் அவரும் பெற்றுக் கொண்டார். அப்போது அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி வேல்முருகன் தலைமையிலான காவல்துறையினர் உதவி மின் பொறியாளர் அஜித் பிரசாத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.