50 பெண்களை ஏமாற்றி பல லட்சம் பணத்தை சுருட்டி மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் பகுதியை பூர்வீகமாக கொண்டவர் 55 வயதான தபேஷ் குமார் பட்டாசார்யா. இவர் 1992இல் கொல்கத்தாவை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் பிறந்த நிலையில், திருமணமான 8 ஆண்டுகளில் மனைவி, மகளை விட்டு பிரிந்து தலைமறைவானார்.
பின்னர், பெங்களுருவுக்கு குடியேறிய அவர் Smart Hire Solution என்ற பெயரில் வேலை வாய்ப்பு நிறுவனத்தை தொடங்கினார். அங்கு வேலை வாங்கி தருவதாக பல ஆண், பெண்களை ஏமாற்றியுள்ளார். இதன் மூலம் நீண்ட நாட்கள் ஏமாற்ற முடியாத நிலையில், ஷாதி மேட்டரிமோனி இணையதளம் மூலம் பெரும் மோசடியில் ஈடுபட பலே திட்டத்தை தீட்டினர். அதன்படி, விவாகரத்து ஆன பெண்கள், கணவரை இழந்த பெண்கள், ஏற்கனவே திருமணமான பெண்களை குறிவைத்து தனது வலையில் வீழ்த்தியுள்ளார்.
அதன்படி, கடந்த 20 ஆண்டுகளில் 50-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். திருமணமான பின் துணையுடன் உடலுறவு கொண்ட பிறகு, அவர்களிடம் இருந்து பணம், நகைகள் போன்றவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பித்துவிடுவார். அந்த வகையில் தபோஷ் குமார் மேற்கு வங்கம், கர்நாடகா, மகாராஷ்டிரா, மணிப்பூர், திரிபுரா, உத்தரப்பிரதேசம், ஒடிசா மற்றும் பல மாநிலங்களிலும் பெண்களை ஏமாற்றி மோசடி செய்து கொள்ளையடித்துள்ளார். இந்த பெண்களில் வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள், வணிகர்கள் மற்றும் பல படித்த பெண்கள் உள்ளனர்.
சில இடங்களில் குடும்ப வன்முறை, மோசடி புகார்களில் சிக்கியும் சிறைவாசத்திற்கு ஆளாகியுள்ளார். இந்நிலையில், பல பெண்கள் புகார்களை கொண்டு ஹரியானா போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு ஒடிசாவில் தலைமறைவாக இருந்த தபேஷை குருகிராம் காவல்துறையினர் கைது செய்தனர். இவர் அங்கு போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.