நாட்டிலேயே மிக விலை உயர்ந்த தோசை என்ற பெயரை ஹைதராபாத் உணவக தோசை பெற்றுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பஞ்ஜாரா ஹில்ஸ் பகுதியில் ஹவுஸ் ஆஃப் தோசா என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தான் நாட்டிலேயே மிக விலை உயர்ந்த தோசை விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை ரூ.1,000. இந்த தோசையின் சிறப்பு என்னவென்றால், 24 காரட் தங்கத்தால் முலாம் பூசப்பட்டிருப்பது தான். இந்த தோசை பற்றி தகவல் கிடைத்தவுடன், அப்பகுதி மக்கள் மட்டுமல்லாமல், சுற்றுலாப் பயணிகளும் இந்த உணவகத்திற்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்த தங்க தோசையின் விலை ரூ.1,000 என நிர்ணயிக்கப்பட்டாலும் கூட, இதனை ஏராளமானோர் வாங்கி ருசிபார்த்து வருகின்றனர். தோசையை தவாவில் ஊற்றிய பிறகு, நெய் ஊற்றுவது போல தங்கத்தைக் கரைத்து தோசையின் மீது ஊற்றுகிறார்கள். இந்த தங்கக் கரைசலுக்குத்தான் இவ்வளவு விலை அதிகம். இந்த தோசைக்கு தொட்டுக் கொள்ள வறுத்த முந்திரி, பாதாம், சுத்தமான நெய், பல வகை சட்னிகளும் வழங்கப்படுகின்றன. மேலும் வறுத்த வேர்க்கடலை, இட்லிப் பொடியும் சேர்த்து பரிமாறப்படுகிறது.