தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவர், திரைப்படங்களில் தற்போது செம பிசியாக நடித்து வருகிறார். தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார் யோகிபாபு. இப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இதுதவிர பாலிவுட்டில் அட்லீ இயக்கிய ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கான் உடனும் நடித்திருக்கிறார் யோகி. இப்படம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆக உள்ளது.
இவரின் கால்ஷீட் கிடைக்காமல் பல தயாரிப்பாளர் ஏங்கி வருகின்றனர். சமீபத்தில் தோனி கூட தான் தயாரித்த முதல் படமான எல்.ஜி.எம் படத்திற்காக யோகிபாபுவின் கால்ஷீட் வாங்க படாதபாடு பட்டதாக கூறியிருந்தார். இப்படி நிற்க கூட நேரம் இல்லாமல் சுழன்று கொண்டிருக்கும் யோகிபாபு, தீண்டாமை கொடுமையை எதிர்கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யோகிபாபு முருகன் மீது அதீத பக்தி கொண்டவர். இதனால் அடிக்கடி முருகன் கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில், அண்மையில் சிறுவாபுரியில் உள்ள முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தார். அப்போது அங்கு வந்திருந்த ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். சாமி தரிசனம் முடிந்து அங்குள்ள அர்ச்சகர் ஒருவரை பார்க்க சென்ற யோகிபாபு, அந்த அர்ச்சகருக்கு கை கொடுக்க கையை நீட்டினார்.
ஆனால் அந்த அர்ச்சகரோ, யோகிபாபுவுக்கு கை கொடுக்க மறுத்துவிட்டார். இதுகுறித்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னணி நகைச்சுவை நடிகரே இப்படி ஒரு தீண்டாமை கொடுமையை எதிர்கொண்டு இருக்கிறாரா என நெட்டிசன்கள் அதிர்ச்சியுடன் பார்த்து வருகின்றனர். யோகிபாபுவுக்கு கை கொடுக்க மறுத்த அர்ச்சகரை கமெண்ட்டில் வறுத்தெடுத்து வருகின்றனர்.