’மும்பை பங்குச் சந்தையை குறிவைத்து தாக்குதல் நடத்துவோம்’ என மத்திய அரசால் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டுள்ள, காலிஸ்தான் பயங்கரவாதி குருபத்வந்த் சிங் பன்னுன் மிரட்டல் விடுத்துள்ளார்.
அமெரிக்காவில், ‘சீக்கியர்களுக்கான நீதி’ என்ற அமைப்பை நடத்தி வருபவர் குருபத்வந்த் சிங் பன்னுன். காலிஸ்தான் தனி நாடு கோரிக்கைக்கு ஆதரவு அளித்து வரும் இவரை, பயங்கரவாதி என இந்திய அரசு அறிவித்துள்ளது. அவரின் அமைப்பையும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் தடை செய்துள்ளது.
இதனால், அமெரிக்காவில் இருந்தபடி மத்திய அரசுக்கு எதிராக குருபத்வந்த் சிங் பன்னுன் செயல்பட்டு வருகிறார். சமீபத்தில், பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருக்கு மிரட்டல் விடுத்திருந்தார். நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினத்தன்று, மீண்டும் நாடாளுமன்றம் தாக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தார்.
அதற்கேற்ற வகையில், கடந்த மாதம் பார்லிமென்டிற்கு உள்ளேயும், வெளியேயும் சிலர் அத்துமீறி நுழைந்து, வண்ண புகை குப்பிகளை வீசி, பரபரப்பை ஏற்படுத்தினர். இந்நிலையில், வரும் மார்ச் 12ஆம் தேதி மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தின், 31வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது. அப்போது, மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தையை குறிவைத்து தாக்குதல் நடத்தும்படி, தங்களின் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு, குருபத்வந்த் சிங் பன்னுன் அழைப்பு விடுத்துள்ளார்.
அத்துடன், ‘இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்க வேண்டும். இந்திய நிறுவன பங்குகளை வீழ்ச்சி அடையச் செய்து, அமெரிக்க நிறுவனங்களின் பங்குகளை அதிக அளவில் வாங்க வேண்டும்’ என்றும் தெரிவித்துள்ளார்.