அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் தமிழ்நாட்டில் இன்றுமுதல் தொடங்குகிறது. மே 29ஆம் தேதி வரை நீடிக்கும் என கூறப்படுகிறது.
சூரிய பகவான், சித்திரை மாதத்தில் மேஷ ராசியில் நுழையும் போது உச்சமடைகிறார். அப்போது சூரியனின் கதிர்கள் நம்மை சுட்டு பொசுக்குகிறது. கார்த்திகை நட்சத்திரத்தின் அதிபதி சூரியன், அதிதேவதை அக்னி. ஆகவே நெருப்புக்கு இணையான வெப்பத்தை கக்குவதால் அக்னி நட்சத்திரம் என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு அக்னி நட்சத்திர காலத்தில் அசானி புயல் உருவாகி மழை கொட்டியது. அதே போல இந்த ஆண்டும் பல ஊர்களில் கோடை மழை கொட்டி வருகிறது. இந்தநிலையில், தமிழ்நாட்டில் இன்றுமுதல் அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் தொடங்குகிறது. இது மே 29ம் தேதிவரை 25 நாட்கள் நீடிக்கும்.
மேலும், வங்கக்கடலில் வரும் 7 மற்றும் 8ஆம் தேதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாகும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வருணபகவான் கருணையால் இந்த ஆண்டு அக்னி நட்சத்திர காலத்தை எளிதாக கடந்து விடலாம் என்று மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வானிலை ஆய்வு மையத்தை பொறுத்தவரையில், அக்னி நட்சத்திரம் என்பது போன்ற பெயரை அவர்கள் உச்சரிப்பது இல்லை. இருந்தாலும், கோடை காலத்தின் இறுதி பகுதியான மே மாதத்தில் வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருப்பதை அவர்கள் மறுக்கவில்லை. அந்த வகையில் இந்த காலகட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும், அனல் காற்றுடன் அதிகபட்ச வெப்பம் பதிவாக வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.