வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 2ஆம் தேதி முதல் புதிய பாடப்புத்தகங்கள் விநியோகம் செய்யப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் தற்போது பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்து, ஜனவரி 1ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் மீண்டும் ஜனவரி 2ஆம் தேதி திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கனமழை வெள்ளம் காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்திலும் அரையாண்டுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு, ஜனவரி 2ஆம் தேதி பள்ளி திறந்த பிறகு, தேர்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, ”வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 2ஆம் தேதி முதல் புதிய பாடப்புத்தகங்கள் விநியோகம் செய்யப்படும் என்றும் பள்ளிகள் திறந்த பிறகு விடுபட்ட பாடங்களுக்கு அரையாண்டுத் தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். அதேபோல், ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டுத் தேர்வுகளை மீண்டும் நடத்துவது பற்றி முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி மழை, வெள்ளத்தால் சான்றிதழ்களை இழந்த மாணவர்களுக்கு நகல் சான்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், சமூக வலைத்தளங்களுக்கு மாணவர்கள் அடிமையாகாமல், அதனை எப்படி நல்ல விஷயங்களுக்குப் பயன்படுத்துவது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.