சென்னையில் இருந்து மதுரை வழியாக செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் சில நாட்களுக்கு இந்த ரயில் சேவை ரத்து நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மதுரை – திருப்பரங்குன்றம் -திருமங்கலம் ரயில் வழித்தடத்தில் இரட்டை வழி பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதனால், இன்று (மார்ச் 1) முதல் பல்வேறு தேதிகளில் முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை எழும்பூரில் இருந்து காரைக்குடி செல்லும் பல்லவன் விரைவு ரயில், மதுரை செல்லும் அதிவிரைவு ரயில், நாகர்கோவில் வாராந்திர ரயில், சென்னை சென்ட்ரலில் இருந்து மதுரை செல்லும் அதிவிரைவு ரயில், சென்னை எழும்பூருக்கு மதுரையிலிருந்து செல்லும் அதிவிரைவு ரயில், காரைக்குடி செல்லும் பல்லவன் ரயில், நாகர்கோவிலில் இருந்து செல்லும் ரயில், நாகர்கோவில் மற்றும் தாம்பரம் இடையே வாரம் 3 முறை இயக்கப்படும் விரைவு ரயில், பெங்களூரு மற்றும் நாகர்கோவில் இடையே இயக்கப்படும் ரயில் ஆகியவை இன்று முதல் 5ஆம் தேதி வரை சில மாற்றங்களுடன் ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல், தேஜஸ் விரைவு ரயில் சேவையும் மார்ச் மாதத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூர் மற்றும் திருச்செந்தூர் விரைவு ரயில் மார்ச் 3ஆம் தேதி வரை திருச்செந்தூர் மற்றும் திருச்சி இடையே பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.