தென்காசியை சேர்ந்தவருக்கு லாட்டரி சீட்டில் முதல் பரிசான ரூ.80 லட்சம் கிடைத்துள்ள நிலையில், பரிசை வென்ற ஐய்யப்ப பக்தரை கேரளா லாட்டரி கடை உரிமையாளர் தேடி வருகிறார்.
தமிழகத்தில் லாட்டரி சீட் விற்பனையானது தடை செய்யப்பட்டுள்ள சூழலில், கேரளாவில் லாட்டரி சீட் விற்பனையானது கேரளா அரசால் அங்கீகரிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் தமிழகத்தை சேர்ந்த ஏராளமானோர் கேரளாவுக்கு செல்லும்போது, அங்கு உள்ள லாட்டரி சீட்டுகளை வாங்குவது வழக்கம். அந்த வகையில், தற்போது ஏராளமான ஐய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று வருகின்றனர். அப்படி, தமிழகத்தில் இருந்து சபரிமலை நோக்கி சென்ற ஐய்யப்ப பக்தர் ஒருவர்
தென்காசி மாவட்டம் தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள ஆரியங்காவு பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு லாட்டரி கடையில் காருண்யா என்று அழைக்கப்படக்கூடிய ஒரு லாட்டரி சீட்டை வாங்கி சென்றுள்ளார். நேற்று முன்தினம் லாட்டரி சீட்டு வாங்கிய அவருக்கு ரூ.80 லட்சம் முதல் பரிசு அடித்துள்ளது.

ஆனால், கோவிலுக்கு சென்ற அந்த ஐய்யப்ப பக்தர் இதுவரை தனது லாட்டரி சீட்டுக்கு பரிசு விழுந்ததா? இல்லையா? என்பது குறித்து பார்க்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், முதல் பரிசான ரூ.80 லட்சத்திற்கு உரிமை கோரி யாரும் வரவில்லை என கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, அந்த லாட்டரி சீட்டை விற்பனை செய்த கடையின் உரிமையாளர் தனது கடையில் இருந்த லாட்டரி சீட்டுக்கு தான் ரூ.80 லட்சம் முதல் பரிசு விழுந்துள்ளதாகவும், அதனை ஒரு ஐய்யப்ப பக்தர் ஒருவர் தான் வாங்கி சென்றதாகவும், அந்த முதல் பரிசு வென்ற அந்த லாட்டரி சீட்டை வைத்திருக்கும் ஐய்யப்ப பக்தரை தான் தேடி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.