பழனி முருகன் கோயிலுக்கு செல்போன் மற்றும் கேமரா கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இது நாளை முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான
பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் சிலர், ஆகமவிதியை மீறி பழனி மலைக்கோயில் கருவறையில் உள்ள நவபாஷாண மூலவரை படம்பிடித்து சமூக வலைதளங்களில் பரப்புவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கருவறையை செல்போனில் படம்பிடிக்க முயன்ற பெண் ஒருவரை பாதுகாப்பு ஊழியர் தடுத்து வெளியேற்றியதால், பெண்ணின் தந்தை திருக்கோவில் ஊழியர் மீது தவறான குற்றச்சாட்டை சுமத்தினார். இந்நிலையில், பழனி கோயிலுக்கு செல்போன் கொண்டு செல்வது தொடர்பாக உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் செல்போன் கொண்டு செல்ல தடை விதித்து நடவடிக்கை எடுப்பதாக, திருக்கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்தது.
இதனையடுத்து, அதற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது. இதன் அடிப்படையில் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி முதல் பழனி கோயிலுக்கு வரும் பக்தர்கள் செல்போன்கள், கேமராக்கள் மற்றும் வீடியோ, புகைப்படங்கள் எடுக்கும் சாதனங்களை கொண்டு வரக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி கொண்டு வரும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.