ரூ. 538 கோடி வங்கி மோசடி வழக்கில் ஜெட் ஏர்வேஸ் விமான சேவை நிறுவனர் நரேஷ் கோயலை செப். 14 வரை நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி அமலாக்கத்துறை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவரான நரேஷ் கோயல் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ரூ. 848 கோடி கடன் பெற்றார். இதில் ரூ. 538.62 கோடி பாக்கியை செலுத்தாமல் மோசடி செய்ததாக நரேஷ் கோயல் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. மோசடி செய்யப்பட்ட பணம் வெளிநாட்டுக் கணக்குகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) உள்ள ஒருவர் அதைக் கவனித்து வருவதாகவும் விசாரணை நிறுவனம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கடந்த 2-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக தலைமை அலுவகத்திற்கு அழைத்துச் சென்றனர் இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டு எப்.ஐ.ஆர்.பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் அமலாக்கத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராப்படுத்தப்பட்ட நரேஷ் கோயலை செப்.14 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். மோசடி வழக்கு தொடர்பாக கோயல், அவரது மனைவி அனிதா மற்றும் சில முன்னாள் நிறுவன நிர்வாகிகள் மீது மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) நடத்திய விசாரணையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.