அடுத்த ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பொதுத் தேர்தலில் பாஜகவை தோற்கடித்து எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தலைமையிலான எதிர்க்கட்சிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிலும், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் இந்த விவகாரத்தில் மும்முரமாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் தான் எதிர்க்கட்சிகளின் கூட்டம் கடந்த மாதம் 23ஆம் தேதி பிகார் மாநிலம் பாட்னாவில் நடந்தது. இந்த கூட்டத்தில் 16 கட்சிகள் பங்கேற்றனர். அதில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், போன்ற தலைவர்கள் பங்கேற்றுக் கொண்டனர்.
இதற்கு நடுவே எதிர்க்கட்சிகளின் 2வது ஆலோசனைக் கூட்டம் பெங்களூரில் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் 24 எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றுக் கொள்ள இருக்கிறார்கள். அதோடு இன்று நடைபெறும் இரவு விருந்து காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கட்சி தலைவர் சோனியா காந்தியும் பங்கேற்கிறார் என்று சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில் தான் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்த விவகாரம் குறித்து அவர் பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கிய பேட்டியில் எதிர்க்கட்சிகள் மகாகத்பந்தன் என்று அழைக்கிறார்கள். ஆனால் உண்மையில் அது பந்தனும் இல்லை. அவர்களுடைய ஒரே நோக்கம் பிரதமர் நரேந்திர மோடியை வீழ்த்துவது தான்,இது சாத்தியமற்றது பூஜ்ஜியத்துடன், பூஜ்ஜியத்தை ஒன்றிணைத்தால் ஒன்றும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்