நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்ட 14 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்தித்வேலூர் சாலையில் ஐவின்ஸ் என்ற பெயரில் உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பு பயின்று வரும் முதலாம் ஆண்டு மாணவ மாணவிகள் 10-க்கும் மேற்பட்டோர் இரவு உணவு சாப்பிட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஷவர்மா, பிரைட் ரைஸ் போன்ற உணவு வகைகளை சாப்பிட்டதாக கூறப்படுகிறது.
இந்த உணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு இன்று அதிகாலை வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு, காய்ச்சலால் போன்றவற்றால், உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இவர்கள் நாமக்கல் மாவட்ட தலைமை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் 6 மாணவிகள், 8 மாணவர்கள் என 14 பேர் மொத்தமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சந்தைப்பேட்டை புதூரை சேர்ந்த கலையரசி (14) என்ற சிறுமி குடும்பத்தாருடன் நேற்று முன்தினம் பரமத்தி சாலையில் உள்ள ஐவின்ஸ் என்ற உணவகத்தில் சாப்பிட்டுள்ளார். இதையடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி இன்று காலை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்த சிறுமியின் தம்பி பூபதி (12), தாய் சுஜாதா, உறவினர்கள் சுனோஜ், கவிதா ஆகியோர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைத் தொடர்ந்து, உணவக உரிமையாளர் நவீன் குமாரை நாமக்கல் போலீசார் அழைத்து விசாரணை செய்து வருகின்றனர். உணவகத்தில் கடந்த சனிக்கிழமை சாப்பிட்டவர்களின் விவரங்கள், மருத்துவமனையில் வேறு யாராவது அனுமதிக்கப்பட்டுள்ளார்களா? என்ற விவரங்களை சேகரிக்க ஆட்சியர் உமா உத்தரவிட்டுள்ளார். மேலும், பிரச்சனைக்கூறிய உணவகத்திற்கு உணவு பாதுகாப்புத் துறையினர் சீல் வைத்தனர்.