தமிழ்நாட்டில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் டெங்கு பாதிப்பு குறைந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. தமிழ்நாட்டில் சில பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பது குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கான தனி மருத்துவ பிரிவும் உருவாக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஒரே வாரத்தில் 113 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதேபோல் செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து தற்போது வரை 200-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், பெசன்ட் நகர் சாலையில் டெங்கு விழிப்புணர்வு மற்றும் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாமினைத் தொடங்கி வைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தமிழ்நாட்டில் கடந்தாண்டை விட நடப்பாண்டில் டெங்கு பாதிப்பு குறைந்துள்ளது. டெங்குவால் 4,227 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 பேர் உயிரிழந்துள்ளதாக கூறியுள்ளார். மாநிலம் முழுவதும் கொசு மற்றும் டெங்கு ஒழிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எதிர்வரும் 3 மாதங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.