ஆன்லைன் கடன் செயலி மோசடி என்பது நாளுக்கு நாள் அச்சுறுத்தல் ஏற்படுத்தி வரும் மிகப்பெரிய மோசடியாக உருவெடுத்து வருகிறது. அவசர தேவைக்காக சிலர் ஆபத்தை அறியாமல், லோன் ஆப்பில் கடன் வாங்குவதும் பின் அவர்கள் மொபைலை ஹேக் செய்து அந்தநபர் மற்றும் அவர்களின் மொபைலில் உள்ள புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து அவர்களின் உறவினர்களுக்கு அனுப்பி அதிக அளவில் பணம் மோசடியில் ஈடுபட்டு வருவதும் வாடிக்கையாகி வருகிறது.
அந்தவகையில், லோன் ஆப்பில் கடன் வாங்கிய திருச்சியைச் சேர்ந்த பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லோன் ஆப்-களில் வாங்கிய கடனுக்கு வட்டியுடன் முழு தொகையை செலுத்தினாலும், கூடுதல் பணம் கேட்டு அந்த மர்ம கும்பல் மிரட்டுகிறது.
அந்த பணத்தை தரவில்லை என்றால், அவர்களின் புகைப்படத்தை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதால், பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.