Mobile exploded: மத்திய பிரதேசத்தில் சமையல் செய்தபோது கொதிக்கும் எண்ணெய் பாத்திரத்தில் தவறி விழுந்த மொபைல் போன் வெடித்துச் சிதறியதில், இளைஞர் உயிரிழந்தார்.
மத்திய பிரதேச மாநிலம் பிண்ட் மாவட்டம் லஹார் பகுதியைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 14 வயதில் மகளும், 8 வயதில் மகனும் உள்ளனர். நேற்று மொபைல் போனில் சமையல் குறிப்புகளை பார்த்தபடி சந்திர பிரகாஷ் இறைச்சி சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது கையில் இருந்த மொபைல் போன் தவறி, கொதிக்கும் எண்ணெய் பாத்திரத்தில் விழுந்தது.
இதில் மொபைல் போன் வெடித்து, தீப்பற்றியதில் சந்திர பிரகாஷ் படுகாயம் அடைந்தார். இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சிந்து நதி பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் இருந்ததால் ஆம்புலன்ஸ் செல்ல தாமதமானது. இதனால் வழியிலேயே சந்திர பிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.