கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருக்கும் பெண் ஒருவர், தனது செல்போனில் உள்ள ஒரு செயலியில் மளிகை பொருட்களை ஆர்டர் செய்துள்ளார். அப்போது, சுமித் சிங் என்ற நபர் அந்த மளிகை பொருட்களை டெலிவரி செய்வதற்காக அப்பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளார்.
இதையடுத்து, மளிகை பொருட்களை அந்த பெண்ணிடம் கொடுத்த நிலையில், அந்த வீட்டில், அப்பெண் மட்டும் தனியாக இருப்பதை உணர்ந்தார் சுமித் சிங். பின்னர், உடனே வீட்டிற்குள் புகுந்து அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பிறகு அந்த பெண்ணை கீழே தள்ளிவிட்டு அந்த இடத்தில் இருந்து ஓட்டம் பிடித்துள்ளார்.
இந்த கொடூர சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை அரங்கேறியுள்ளது. அதே நாளில் பாதிக்கப்பட்ட அந்த பெண் காவல்நிலையத்தில் புகாரளித்தார். பின்னர் தனிப்படை அமைத்து அந்த நபரை போலீசார் தேடி வந்த நிலையில், கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் அந்த குற்றவாளியை போலீசார் கண்டுபிடித்தனர்.
அவரைக் கைது செய்ய ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு சென்றபோது, சுமித் கான்ஸ்டபிள் ஒருவரிடம் இருந்து துப்பாக்கியைப் பறித்துகொண்டு அங்கிருந்து தப்பினான். உடனே அப்பகுதியில் தேடுதல் மற்றும் சுமித்தை பிடிக்க SWAT குழுக்கள் வரவழைக்கப்பட்டன. போலீஸ் குழுக்கள் அவரை நெருங்கியதும் அவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் போலீசார் திருப்பிச் சுட்டதில் அவர் காலில் குண்டு பாய்ந்துள்ளது.
இதையடுத்து, சுருண்டு விழுந்த சுமித் கைது செய்யப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் ஏற்கனவே சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.