நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து மாவட்ட சட்டம்-ஒழுங்கு குறித்து விரிவான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமைச்செயலாளர் ஷிவ்தாஸ் மீனா, உள்துறைச்செயலாளர் அமுதா, டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பது, காவல்துறையினரின் மன அழுத்தங்களை போக்குவதற்கான நடவடிக்கை, காவல்துறையினர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அப்போது முதலமைச்சர் முக.ஸ்டாலின் பேசுகையில், ”தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ காரணம் சட்டம் – ஒழுங்குதான். அடுத்து வரும் ஓராண்டு காலம் மிக முக்கியமானது. பிரச்சனைகள் கண்டறியப்பட்டால் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். அடுத்த ஓராண்டுக்கு மக்களை பாதிக்கும் எந்தவொரு சட்டம் – ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படாதவாறு உறுதி செய்ய வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் வரவிருப்பதால் மிக மிக எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது தலையாய கடமை.
மக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். புகார்கள் மீது நடுநிலை தவறாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். விருப்பு வெறுப்பில்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு மாறாக பேசி முடித்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும். அதேபோல கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனையை முற்றிலுமாக அகற்றுவதை உறுதி செய்ய வேண்டும். போதை என்பது தனிமனிதனின் பிரச்சனையல்ல, அது ஒரு சமூக பிரச்னை.
சமூக வலைதளங்கள் மூலமாக சாதி, மத வன்மங்களை பரப்புபவர்கள் அதிகமாகி வருகிறார்கள். அவர்களை கண்காணிக்க வேண்டும். நச்சுக்கருத்துகளை பரப்புவர்களை கண்காணித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றங்களை கண்டுபிடிப்பது மட்டுமல்லாமல், குற்றத்தை தடுக்கும் துறையாக காவல்துறை செயல்பட வேண்டும். கடந்த மாதத்தை விட குற்றம் குறைந்திருக்கிறது என்ற புள்ளி விவரம் வேண்டாம், குற்றமே நடைபெறவில்லை என்ற முற்றுப்புள்ளி விவரமே வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.