பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் இடங்களில் நாடு முழுவதும் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதை கண்டித்து கடந்த 23-ஆம் தேதி கேரளாவில் அந்த அமைப்பினர் முழு அடைப்பு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. போராட்டத்தின் போது பொது சொத்துக்களை சேதப்படுத்தப்பட்டது.
மாநிலத்தில் முழு அடைப்புக்கு தடை விதித்து இருந்த நிலையில், இந்த போராட்டத்தை வழக்காக பதிவு செய்து உயர் நீதிமன்றம் விசாரித்தது. அப்போது பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் போராட்டம் சட்ட விரோதமானது எனவும், அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனவும் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. முழு வேலை நிறுத்தம் நடத்துவதற்கு ஏழு நாட்களுக்கு முன்பே நோட்டீஸ் வழங்க வேண்டும் என்ற உத்தரவை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், விதியை மீறிய பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட்டனர்.
இந்த சட்டவிரோத நடவடிக்கைக்கு, மாநில பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநிலக்குழு மற்றும் போதுச்செயலாலர் பொறுப்பு என கூறிய நீதிபதிகள், போராட்டத்தில் உண்டான சேதங்களை மதிப்பிடுமாறும், தேவைப்பட்டால் இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யுமாறும் காவல்துறையினருக்கு உத்தரவிட்டனர். இதை தொடர்ந்து, கேரளாவில் மாநில அரசு பஸ்களை சேதப்படுத்தியதற்காக ரூ. 5.20 கோடியை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு டெபாசிட் செய்ய வேண்டும் என கேரள மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பி.எப்.ஐ. அமைப்பின் பொதுச்செயலாளராக இருந்தவர்கள் இரண்டு வாரங்களில் பணத்தை டெபாசிட் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.