ஒட்டுமொத்த இந்தியாவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த 2024 மக்களவைத் தேர்தலுக்கான தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் அட்டவணையை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் பேசுகையில், இந்த ஆண்டில் நடைபெறும் மிக முக்கியமான செய்தியாளர் சந்திப்பு இதுதான். தேர்தல் திருவிழாவில் எங்களுடன் நீங்கள் பங்கெடுத்துக் கொள்ளுங்கள். மக்களவைத் தேர்தலை நடத்த முழு அளவில் தயாராக உள்ளோம். நடப்பு மக்களவை தேர்தலில் 96.8 கோடி வாக்காளர்கள் உள்ளனர். வாக்களிக்க ஏதுவாக 10.5 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். 55 லட்சம் மின்னணு வாக்கு இயந்திரங்கள் தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ளன. தேர்தல் தொடர்பாக போலி செய்திகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 1.82 கோடி வாக்காளர்கள் இந்த தேர்தலில் முதன்முறையாக வாக்களிக்க உள்ளனர். 82 லட்சம் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர்.
KYC App மூலம் வேட்பாளர்கள் முழு விவரங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம். குற்றப்பின்னணி உள்ள வேட்பாளர்கள் குறித்த தகவல்களை நாளிதழ்களில் வெளியிட கட்சிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தலில் முடிந்தவரை வன்முறையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாடு முழுவதும் உள்ள சோதனைச் சாவடிகள் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். ட்ரோன்கள் மூலம் எல்லைகள் கண்காணிக்கப்படும். வாக்குகளுக்கு பணம், பொருட்கள் அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பணப்பரிவர்த்தனை தொடர்பாக வருமான வரித்துறை, அமலாக்கத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பார்கள்.
சமூக வலைதளங்களில் விமர்சிக்கலாம். ஆனால், போலி செய்திகளை வெளியிடக் கூடாது. ஆன்லைன் பரிவர்த்தனைக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு வங்கி வாகனங்களில் பணம் எடுத்துச் செல்லக் கூடாது. சமூக வலைதளங்களில் அரசியல் கட்சியினர் கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும். அரசியல் கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்கள் கண்ணியத்துடன் பரப்புரையில் ஈடுபட வேண்டும். மத ரீதியாகவோ, தனிப்பட்ட முறையிலோ விமர்சித்து பரப்புரையில் ஈடுபடக் கூடாது. விளம்பரங்களை நம்ப தகுந்த செய்தியாக்க முயற்சிக்கக் கூடாது. தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சம வாய்ப்பு அளிக்கப்படும். பரப்புரையில் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளை பயன்படுத்தக் கூடாது.
முக்கிய அறிவிப்புகள்
2024ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டின் விளவங்கோடு இடைத்தேர்தலும் ஏப்.19ஆம் தேதி நடைபெறவுள்ளது.