சென்னையில் வரும் பிப்ரவரி 8ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் மாதவரம் புனித அன்னாள் கலை மற்றும் கல்லூரியில் கடந்தாண்டு டிசம்பர் 14ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருந்தது. ஆனால், அப்போது பெய்த தொடர் மழையால் வேலைவாய்ப்பு முகாம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் தான், பிப்ரவரி 8ஆம் தேதி மாதவரம் புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை நடைபெறவுள்ளது. மேலும், இந்த முகாமினை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தொடங்கி வைக்கவுள்ளார்.
இந்த முகாமில் 200-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ளவுள்ள நிலையில், 20,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டவுள்ளன. 8ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றவர்கள், பட்டதாரிகள், ஐடிஐ, தொழிற்கல்வி, பொறியியல் பட்டம் பெற்றவர்கள், கணினி, தையல் கற்றவர்கள் என தகுதியுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம்.
தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்கள் https://forms.gle/qsZbxrrSn547L9ep7 என்ற இணையதளத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்து பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களை www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.