கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சரக டிஐஜி விஜயகுமார், துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
கோவை சரக டிஐஜி விஜயகுமார், கடந்த 2009ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்று காவல்துறை பணியில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார். அதேபோல, சென்னையில் அண்ணா நகர் துணை ஆணையராக பணியாற்றி வந்த இவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் கோவை சரக டி.ஐ.ஜி-யாக கடந்த ஜனவரி மாதம் 6ஆம் தேதி கோவை சரக காவல்துறை துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு பணிபுரிந்து வந்தார்.
குரூப் 1 தேர்வு எழுதி டிஎஸ்பியாக பதவி ஏற்றபின் இரு ஆண்டுகளுக்கு பின்பு ஐபிஎஸ் தேர்வில் தமிழ் வழியில் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர், முதன்முதலாக வள்ளியூரில் ஏஎஸ்பியாக பதவி ஏற்றார். சாத்தான்குளம் இரட்டை கொலை சிபிசிஐடி எஸ்பி-யாக அப்பொழுது பணியாற்றி விசாரணை நடத்தினார். டிஐஜியின் இந்த தற்கொலைக்கு குடும்ப பிரச்சனையாக காரணமாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. தனது பாதுகாவலரின் துப்பாக்கியை பிடுங்கி தன்னைத் தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அவரது சொந்த ஊர் தேனி மாவட்டம் ரத்தினம் நகர் என்பது குறிப்பிடத்தக்கது.