இந்தியாவில் நிகழும் சாலை விபத்துகளில் இருசக்கர வாகன விபத்துகளே அதிகம். கடந்த 2019இல் 1.67 லட்சம் சாலை விபத்துகளும், 2020இல் 1.56 லட்சம் சாலை விபத்துகளும் நிகழ்ந்துள்ளன. இதில் 2019இல் 56,136 பேரும், 2020இல் 56,873 பேரும் உயிரிழந்துள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. ஆண்டு தோறும் விபத்துக்களும், விபத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது. விபத்து நடக்கும் போது டூவீலர்களில் செல்பவர்கள் தூக்கி வீசப்படவோ, அல்லது கனமான கல் அல்லது பிற பொருட்களின் மீது மோதவோ வாய்ப்பு இருக்கிறது. இதனால், டூவீலர் விபத்தில் அதிக மரணம் நிகழ்கிறது. இதைத் தடுக்க பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், எதிர்காலத்தில் டூவீலர் விபத்தில் ஏற்படும் மரணங்களைக் குறைக்க பல நிறுவனங்கள் புதிய கருவிகளை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அதில், ஹோண்டா நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம் டூவீலர்களுக்கான ஏர் பேக்குகளை உருவாக்க முயற்சித்து வருகிறது. இதற்காக 2 விதமான ஏர்பேக்குகளை உருவாக்கியுள்ளது. அதற்கான காப்புரிமையையும் பெற்றுள்ளது. ஹோண்டா நிறுவனம் தற்போது ஸ்கூட்டர் மற்றும் பைக் ஆகியவற்றிற்கு ஏற்ற ஏர்பேக்குகளை உருவாக்கி வருகிறது.
இதை அட்வான்ஸ் ஸிமுலேஷன் டூலில் வைத்து பரிசோதனையும் செய்யப்பட்டு விட்டது. மேலும் கிராஷ் டெஸ்டும் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த கான்செப்ட் மாடலை ஹோண்டா நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், முதல் வகை ரைடர் சீட்டிற்குக் கீழே பொருத்தப்பட்டுள்ளது. இது டூவீலர் விபத்தில் சிக்கினால் ரைடருக்கு பாதுகாப்பை வழங்கும். மற்றொரு வகை ரைடர் மற்றும் பில்லியன் சீட்டிற்கு இடையில் பொருத்தப்படும். விபத்து ஏற்படும் போது இருவரையும் இது பாதுகாக்கும். இதன் முன்னோடியாக கடந்த ஆண்டு அறிமுகமான ஹோண்டாவின் கோல்டு விங் டூர் பைகில் ஏர்பேக் பொருத்தப்பட்டுள்ளது. ஹோண்டா மட்டுமல்ல பியாஜியோ நிறுவனமும் டூவீலர்களுக்கான ஏர்பேக்குகளை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த முயற்சிகள் வெற்றியடைந்தால் வரும் காலத்தில் பாதுகாப்பான ஏர் பேக்குகள் பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனங்களில் நாம் பயணிக்கலாம். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்றே தெரிகிறது.