கன்னியாகுமரி தொகுதியில் ஏற்கனவே முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். ஏனென்றால், அவர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த தனக்கு இருந்த பதவியை முழுமையாக பயன்படுத்தவில்லை. அவர் சுயலாபத்திற்காக மட்டுமே பயன்படுத்திக் கொண்டதாக பாஜக நிர்வாகிகள் மத்தியிலேயே பேச்சு அடிபட்டது.
2009ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், திமுக பெண் வேட்பாளர் ஹெலன் டேவிட்சன்க்கு வாய்ப்பு அளித்த நிலையில், அவர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எனவே, கன்னியாகுமரியில் பெண் வேட்பாளர்களின் உணர்வு எப்போதும் பெரிய அளவில் செயல்படுவதாக பாஜக கருதுகிறது. ஆகையால், வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு பெண் வேட்பாளருக்கு வாய்ப்பு அளிக்க தமிழக பாஜக தலைமை நினைக்கிறது. இந்த முயற்சி கன்னியாகுமரி தொகுதியை வெற்றி பெற வைக்கும் என நம்புகிறார்கள்.
தேர்வுப் பட்டியலில் 3 வேட்பாளர்கள் உள்ளனர். முதல் வேட்பாளர் பட்டியலில் இருப்பவரின் பெயர் மீனாதேவ். இவர், ஏற்கனவே நாகர்கோவில் நகராட்சி சேர்மன் ஆக இருந்தவர். மேலும், தமிழக பாஜக மாநில செயலாளர் பதவியிலும் உள்ளார். அண்ணாமலைக்கும் இவரை நன்கு தெரியும். மாவட்ட மக்களுக்கும் அவர் ஓரளவு பரிச்சயமான முகம். ஆனால், இவருக்கு சீட் கொடுப்பதில் என்ன சிக்கல் என்றால், கடந்த தேர்தல் காலங்களில் சட்டமன்ற தேர்தல், சேர்மன் தேர்தல், கடைசியாக நாகர்கோவில் மாநகராட்சி பாஜக மேயர் வேட்பாளராகப் பல வாய்ப்புகள் வழங்கப்பட்டு, அனைத்து தேர்தல்களிலும் தோல்வியடைந்தார்.
அடுத்து வேட்பாளர் பட்டியலில் இருப்பவரின் பெயர் திவ்யா சிவராம். நாகர்கோவில் மாநகராட்சி மண்டலச் செயலாளராக உள்ளார். மேலும், அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசனின் மருமகள் ஆவார். நாகர்கோவில் மாநகராட்சி தேர்தலில் அதிமுக சார்பில் நாஞ்சில் முருகேசனின் மகள் ஶ்ரீலிஜாவும், பாஜக சார்பில் திவ்யா சிவராமும் ஒரே வார்டில் போட்டியிட்டனர். அந்த நேரத்தில் மேயர் தேர்தலில் இது ஒரு பெரிய பேச்சு பொருளாக இருந்தது. இதனால், இவர் ஒரு பிரபலமான வேட்பாளராக கருதப்படுகிறார். இவர், ஒரு புதிய முகம் மற்றும் பணபலம் நிறைந்தவர்.
3-வதாக வேட்பாளர் பட்டியலில் இருப்பவரின் பெயர் உமாரதி ராஜன். பாஜக தமிழ்நாடு மாநில மகளிர் அணிச் செயலாளராக உள்ளார். மாநிலம் முழுவதும் பயணம் செய்து பலருக்கும் தெரிந்தவர். ஆனால், அவருக்கு சீட் கொடுப்பதில் என்ன பிரச்சனை என்றால், அவர் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர். அவருக்கு சீட் கொடுத்தால் மற்ற சமூகத்தினர் யாரும் ஆதரிக்க மாட்டார்கள். அதனால் அவருக்கும் சீட் கொடுப்பதில் வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது. பாஜக தலைமை யாருக்கு கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் சீட் கொடுக்க போவது என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.