நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அருகே மஞ்சங்குளத்தில் குடியிருக்கும் சுந்தரபாண்டியன் மகன் சாமிதுரை(25). இவர் அவர்களின் சொந்த விவசாய நிலத்தில் விவசாய வேலைகளை செய்து வந்ததுள்ளார். இந்நிலையில் இவர் மீது அடிதடி, வழிப்பறி, கொலை என பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. அந்த பகுதியில் ரவுடியாக இருந்துள்ளார். தொடர்ந்து பல்வேறு அடிதடி வழக்குகளில் சிக்கியதால் இவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர் .
இதற்கிடையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சிறையில் இருந்து விடுதலையாகி இருக்கிறார். இந்நிலையில் சாமிதுரைக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு அடுத்த மாதம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு வீட்டின் வெளியே இருந்த பேருந்து நிறுத்தத்தில் தூங்கிக் கொண்டிருந்த சாமிதுரையை, மர்ம கும்பல் அருகில் இருக்கும் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே சாமிதுரை உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த நாங்குநேரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாமிதுரை உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில் பழிவாங்கும் நோக்கத்தில் சாமிதுரை கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என தெரியவந்துள்ளது.