காதலுக்கு கண்ணில்லை என்று சொல்வது பல நேரங்களில் உண்மை என்று நிரூபணமாகி இருக்கிறது. காதலனைத் தேடி, காதலனை நம்பி வீட்டை விட்டு சென்ற பல பெண்களுக்கு விபரீதங்கள் நடந்துள்ள சம்பவங்களை அவ்வபோது காண்கிறோம். நம் நாட்டில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் கூட இதே போன்ற சம்பவம் நடந்துள்ளது.

ஆன்லைனில் ஒருவரை அறிமுகமாகி காதலிப்பது என்பது புதிதல்ல. தற்போது இது அதிகமாகிவரும் ஒரு ட்ரெண்ட் ஆகவும் இருக்கிறது. மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த பிளான்க்கா அரேல்லானோ என்ற பெண்மணி கடந்த ஜூலை மாதம் முதல் ஆன்லைனில், சுவான் பாப்லோ ஜீசஸ் வில்லாஃபியோவர்டே என்ற நபருடன் பழகி வந்துள்ளார். ப்ளான்காவின் வயது 51 மற்றும் ஜூவானின் வயது 37 என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அறிமுகம் விரைவில் காதலாக மாறி, சில மாதங்கள் தொடர்ந்துள்ளது. தன்னுடைய காதலனை சந்திப்பதற்கு லிமா வுக்கு செல்லப் போவதாக தனது குடும்பத்தினரிடம் தெரிவித்திருக்கிறார். சில நாட்கள் அவரிடம் இருந்து தகவல் இல்லை என்பதால், அவர் பெருவிற்கு சென்றிருக்கலாம் என்ற நினைத்தனர்.

பெருவில் உள்ள ஹுவசோ கடற்கரை நகரத்தில் தான் ஜுவான் வசிப்பதாகவும், பிளான்கா அங்கு சென்றிருக்கலாம் என்றும் அவரின் குடும்பத்தார் நினைத்துக் கொண்டிருந்தனர். நவம்பர் 7ஆம் தேதி அன்று, பிளான்கா தன்னுடைய உறவுப் பெண்ணுடன் பேசியதாக செய்தி வெளியானது. அதில் பிளான்கா நன்றாக இருப்பதாகவும், ‘காதலில்’ இருப்பதாகவும் கூறியதாக தெரிவிக்கப்பட்டது. நவம்பர் 7 ஆம் தேதி வரை, பிளான்காவின் குடும்பத்தினர் இதைத் தான் தங்களுக்குள் ஆறுதலாக கூறிக் கொண்டிருந்தனர். அதன் பிறகு இரண்டு வாரங்களுக்கு, பிளான்காவிடம் இருந்து எந்த விதமான தகவலும் இல்லை. எனவே, ட்விட்டரில் அவருடைய உறவுப்பெண் பதட்டமாக விவரங்களைப் பகிர்ந்தார். அதைத் தொடர்ந்து, பெருவின் உள்ளூர் அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
அதைத் தொடர்ந்து, போலீசாரின் தேடுதல் வேட்டையில் ஜுவான் கொலைகாராரக இருக்கலாம் என்று சந்தேகித்து, அவரது அபார்ட்மெண்ட்டை பரிசோதனை செய்தபோது, குளியல் அறை, படுக்கை அறை, மெத்தை என்று அபார்ட்மெண்ட் முழுவதும் ரத்தக்கறை இருந்ததாக செய்தி வெளியானது. நவம்பர் 9ஆம் தேதி, பெருவில் உள்ள ஹுவசோ கடற்கரையில் அப்பெண்ணின் சேதமடைந்த உடலை அங்கிருந்த உள்ளூர் மீனவர்கள் கண்டறிந்துள்ளனர். தனது வீட்டில் இருந்து தன்னுடைய காதலனை சந்திக்க சென்ற ஒரு பெண்மணியின் உடல் அங்கிருந்து 5000 கிலோ மீட்டர் தொலைவில் துண்டுகளாக்கப்பட்ட உடலாகத்தான் கரையோரத்தில் கிடைத்திருக்கிறது. இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.