விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் உதவித்தொகையை உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிஎம் கிசான் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 8.5 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் ஒவ்வொரு ஆண்டும் 3 தவணைகளாக தலா ரூ.2,000 செலுத்தப்படுகிறது. இந்நிலையில், இந்த உதவித் தொகையை ரூ.8,000 ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் விவசாயிகளுக்கான வேளாண் உதவித் திட்டம் முதன் முதலாக தொடங்கப்பட்டது. அப்போதில் இருந்து இதுவரை விவசாயிகளுக்கு மொத்தம் 15 தவணைகளாக வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது. பயனாளிகளுக்கு இதுவரை மொத்தம் 2.75 லட்சம் கோடி பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், லோக்சபா தேர்தல் வரவிருப்பதை கருத்தில் கொண்டு, உதவித் தொகையை ரூ.8,000ஆக உயர்த்துவதற்கு மத்திய பரிசீலித்து வருகிறது. இதுகுறித்த இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி, நாடெங்கிலும் உள்ள மக்களுக்கு, ஒரு மாதத்திற்கு 5 கிலோ உணவுப் பொருள் என்ற வகையில் உணவுப் பொருள், தானியங்கள் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.