பிஎம் கிசான் திட்டம் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 வழங்கப்பட்டு வருகிறது. இது 3 தவணைகளாக பிரித்து ரூ.2 ஆயிரம் வீதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. பிஎம் கிசான் திட்டப்பட்டி, முதல் தவணை ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரையிலும், இரண்டாவது தவணை ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 30 வரையிலும், மூன்றாவது தவணை டிசம்பர் 1 முதல் மார்ச் 31 வரை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இதுவரை 12 தவணை பணம் வழங்கப்பட்டுள்ளது. 13-வது தவணை பணம் வங்கிக் கணக்கில் விரைவில் வர இருக்கிறது.
இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகையானது ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரமாக உயர்த்தி அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், அது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில், இதற்கு மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதாவது, பிஎம் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகையானது உயர்த்தி வழங்கும் திட்டமில்லை என தெரிவித்துள்ளார்.