தமிழ்நாட்டில் ரேஷன் அரிசி கடத்தலை தடுத்து நிறுத்த, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ரேஷன் பொருட்கள் பதுக்குதல் குறித்து, இலவச தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று காவல்துறை பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டபடியே உள்ளது. இது தவிர, உணவு பொருள் கடத்தல் பிரிவுக்கு என ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நுண்ணறிவு பிரிவு அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், அரிசி கடத்தலில் ஈடுபடுவோர் மீதான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகின்றனர்.
இரு தினங்களுக்கு முன்பு கூட பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 800 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 2 பேரிடம் விசாரிக்கையில், பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, அதை பதுக்கி வைத்துவிடுகிறார்களாம். பிறகு, அந்த அரிசிகளை மூட்டை கட்டி, கேரளாவில் அதிக விலைக்கு விற்பனை செய்துவிடுவதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
அதேபோல, திருச்சி ரோட்டில் 450 கிலோ ரேஷன் அரிசி கொட்டிக் கிடந்துள்ளது. மாநகராட்சி 40-வது வார்டுக்கு உட்பட்ட மலைக்கோவில் ராஜவீதியில் சாலையில் ரேஷன் அரிசி மூட்டைகள் கிடப்பதாக திருவெறும்பூர் வட்ட வழங்க அலுவலர் நாகலட்சுமிக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அதனால், திருவெறும்பூர் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றபோது, ரோட்டிலேயே 6 மூட்டைகளில் ரேஷன் அரிசி கிடைப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த அரிசி மூட்டைகள் கிடந்த இடத்துக்கு அருகிலிருந்த வீட்டில், 3 மூட்டை ரேஷன் அரிசி இருந்திருக்கிறது. இதுகுறித்து அந்த வீட்டு ஓனரிடம் போலீசார் விசாரித்தனர். அதற்கு அவர்கள், “தாங்கள் வெளியில் சென்று இருந்ததாகவும், யாரோ மர்ம நபர்கள் கேட்டை திறந்து, வீட்டு வாசலுக்குள் போட்டுவிட்டு போய்விட்டதாகவும், இந்த அரிசி மூட்டைக்கும், தங்களுக்கும் சம்பந்தம் இல்லை” என்றும் கூறியுள்ளனர். இதையடுத்து, அங்கிருந்த மொத்தம் 40 கிலோ ரேசன் அரிசியை திருவெறும்பூர் வட்ட வழங்கல் அலுவலர் பறிமுதல் செய்தார்.
இருந்தாலும், 450 கிலோ ரேஷன் அரிசியை, ரோட்டில் வீசி சென்றது யார்? உண்மையிலேயே அருகில் உள்ள வீட்டுக்காரருக்கும் இந்த சம்பவத்துக்கும் தொடர்பு உள்ளதா? அல்லது வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? 450 கிலோ அரிசி மொத்தமாக எப்படி கிடைத்திருக்கும்? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.