ஆந்திர மாநிலம் வெங்கட்ராவ் பேட்டையை சேர்ந்தவர் கல்லூரி மாணவி தீபா (18). இவர், அதே பகுதியை சேர்ந்த கமலிகர் என்ற ஆட்டோ ஓட்டுநரை காதலித்து வந்துள்ளார். நெருக்கமாக பழகி வந்த இவர்களிடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தீபா காதலனை சந்திப்பதை தவிர்த்து வந்துள்ளார். தீபாவை சந்தித்து பேச கமலிகர் பலமுறை முயற்சி செய்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை தீபாவின் பெற்றோர் மற்றும் சகோதரர் யாரும் வீட்டில் இல்லை. இதனை அறிந்த கமலிகர் தீபாவின் வீட்டிற்குள் நுழைந்தார். அப்போது, தீபாவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கமலிகர், தீபாவை சரமாரியாக தாக்கியுள்ளார்.
பின்னர் தான் மறைத்து கொண்டு வந்த பூச்சிக்கொல்லி மருந்தை வலுக்கட்டாயமாக தீபாவின் வாயில் ஊற்றியுள்ளார். அப்போது, பக்கத்து வீட்டை சேர்ந்த ஜீவனா என்ற 10 வயது சிறுமி பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்தார். அவர்கள் வருவதற்குள் கமலிகர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். தீபாவின் வீட்டிற்கு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரீம் நகர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி தீபா உயிரிழந்தார். இதுகுறித்து கரீம்நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கமலிகரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.