நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஜீவா நகரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (27). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர், சென்னை குரோம்பேட்டை ராதா நகரைச் சேர்ந்த சுவேதா (21) என்ற இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். சுவேதா லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வந்தார். இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி சென்னை தாம்பரம் ரயில் நிலையம் அருகே ராமச்சந்திரனும், சுவேதாவும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுவேதாவின் கழுத்தை அறுத்து கொன்று விட்டு தானும் தற்கொலைக்கு முயன்றார் ராமச்சந்திரன். இந்த சம்பவத்தில் சுவேதா பரிதாபமாக உயிரிழந்தார்.
கழுத்து அறுபட்ட நிலையில் ராமச்சந்திரன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் ராமச்சந்திரனை கைது செய்தனர். இதையடுத்து, சிறை தண்டனையை அனுபவித்து ஜாமீனில் வெளிவந்தார். மேலும், இது தொடர்பான வழக்கு செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது. இந்த வழக்கில் கோர்ட்டில் ஆஜராக வேண்டிய நிலையில், தனது சொந்த ஊரில் இருந்த ராமச்சந்திரன், தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள புளியமரத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ராமச்சந்திரன் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்த அவரது உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அங்கு விரைந்த அவர்கள், ராமச்சந்திரனின் உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.