தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் காலை உணவு வழங்க தமிழக அரசு திட்டம் கொண்டு வந்துள்ளது. அதன்படி, முதற்கட்டமாக தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் கிராமப்புறங்களில் இருக்கும் 1,545 பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.
இதற்காக தமிழ்நாடு அரசு ரூ.33.56 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்மூலமாக 1.14 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைவர். இத்திட்டம் படிப்படியாக தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது. காலையில் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு சூடான, சத்தான உணவை, அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்த வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ஆம் தேதி அன்று பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் தொடங்கி வைக்க இருக்கிறார். மதுரை மாநகராட்சியில் இருக்கும் 26 தொடக்கப் பள்ளிகளில் 4,388 மாணவர்கள் பயனடையும் வகையில் திட்டம் செயல்பட உள்ளது. சென்னை உட்பட 14 மாநகராட்சிகளில் 318 பள்ளிகளில் 37,740 மாணவ, மாணவியருக்கு சிற்றுண்டி வழங்கப்பட இருக்கிறது. அதுபோல தமிழகத்தில் 23 நகராட்சிகளில் இருக்கும் 163 பள்ளிகளில் 17,427 மாணவ, மாணவியருக்கு சிற்றுண்டி வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.