முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவின் பெயர், கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை விதிக்க கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சமீபத்தில் அதிமுக சின்னம், பெயர், கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்த தனி நீதிபதி தடை விதித்தார். இந்த தடையை ரத்து செய்யக்கோரி ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், அதிமுக சின்னம், கொடியை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரிய வழக்கில் ஓபிஎஸ்-க்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதாவது, அதிமுக பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்த தனி நீதிபதி விதித்த தடையை நீக்க முடியாது எனக்கூறி, ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.