ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியில்லை என டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கூட்டணி கட்சி தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை பல்வேறு இடங்களில் இருந்து ஈரோட்டுக்கு வந்து உள்ளனர். தினமும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை அவர்கள் தேர்தல் பணியாற்றி வருகின்றனர். இதில் ஒவ்வொரு வரும் ஒவ்வொரு முறையில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்த தேர்தலில் ஒவ்வொரு பகுதிக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என அமமுக அறிவித்துள்ளது. இந்த தேர்தலுக்கு தங்களின் குக்கர் சின்னம் கிடைக்காத காரணத்தினால் தேர்தலில் போட்டியிடவில்லை என கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். ஏற்கனவே அவரது வேட்பாளர் சிவ பிரசாந்த் வேட்புமனு தாக்கல் செய்துவிட்ட நிலையில், வேட்புமனுவை வாபஸ் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுத்தேர்தலில் குக்கர் சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையம், இடைத்தேர்தலில் ஒதுக்க இயலாது என கூறியுள்ளது. ஓராண்டில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், புதிய சின்னத்தில் போட்டியிட்டால் குழப்பம் ஏற்படும் என தினகரன் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தலில் போட்டிடுவதை தவிர்ப்பதே சரியானது என்ற நிர்வாகிகள் ஆலோசனைப்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.