திருச்சி மாவட்டம் சுப்பிரமணியபுரம் கென்னடி தெருவில் முகமதுபாபு என்ற கண்ணன் (40), சமீமாபேகம் (34) தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். கணவன் – மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஒரு கட்டத்தில் கணவனின் கொடுமையை தாங்கமுடியாத சமீமாபேகம், கணவரைவிட்டு பிரிந்து தனது தாயாருடன் வசித்து வந்துள்ளார். முகமதுபாபு அவ்வப்போது, அவர்கள் வீட்டிற்கு சென்று, நமது வீட்டிற்கு வந்துவிடுமாறு அழைப்பு விடுத்துள்ளார். அதுபோல் நேற்று முன்தினம் இரவும் அங்கு சென்று மனைவியை முகமதுபாபு வீட்டுக்கு அழைத்துள்ளார். பின்னர் குடும்பத்தினர் பேசி, சமீபா பேகத்தை முகமதுபாபுவுடன் அனுப்பி வைத்தனர்.
ஆனால், வீட்டுக்கு வந்த பிறகு மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த முகமதுபாபு, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மனைவி சமீபா பேகத்தை வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்த சமீமாபேகத்தை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர், தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி குறித்து தகவல் அறிந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து முகமதுபாபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.