டெல்லியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தனது புகைப்படங்கள் மார்பிங் செய்யப்பட்டு ஆபாச இணையதளங்களில் வெளிவந்துள்ளதாகவும், தனது சகோதரனுடன் இருக்கும் படங்களை தவறாக சித்தரித்து வெளியிட்டுள்ளதாகவும், புதிய எண்களில் இருந்து தவறான செய்திகள் வருவதாவும் தெரிவித்துள்ளார். இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வந்தனர். புகார் கொடுத்த பெண்ணின் மார்பிங் புகைப்படங்களை வெளியிட்ட நபர் யார் என போலீசார் தேடி வந்த நிலையில், அது 19 வயது கல்லூரி மாணவி என்பது விசாரணையில் தெரியவந்தது.
மேலும் விசாரணையில், புகார் கொடுத்த பெண்ணின் சகோதரர் இதற்கு முன்னர் கல்லூரி மாணவியின் படங்களை மார்பிங் செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டது தெரியவந்துள்ளது. சகோதரரை பழி வாங்குவதற்காக அவரது சகோதரியின் படங்களை சமூக வலைதளங்களில் இருந்து எடுத்து அதை தவறாக சித்தரித்து வெளியிட்டதாக அந்த கல்லூரி மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார். அதோடு படங்களை பதிவிடுவதற்காக தனது அம்மாவின் போன் நம்பரை வைத்து போலி சமூக ஊடக கணக்கையும் உருவாக்கியுள்ளார். இந்நிலையில், தான் செய்த தவறை ஒப்புக் கொண்டதை அடுத்து அந்த மாணவியை போலீசார் கைது செய்தனர்.