உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபத்தில் உள்ள சிஹானிகேட் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (19). இவர், பெட்ரோல் பங்க் ஒன்றில் கார் கிளீனராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று மோஹித் என்ற நபருக்கும், விஜய்க்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த மோஹித், விஜய்யைத் தாக்கி அவரை கீழே தள்ளியிருக்கிறார். மேலும், அவர் மீது ஏறி அமர்ந்து, அவரின் அந்தரங்க உறுப்பில் ஏர் பைப்பைச் சொருகிக் காற்றைத் திறந்துவிட்டு, அங்கிருந்து தப்பியோடியிருக்கிறார். விஜய் வலி தாங்க முடியாமல் அலறி துடித்துள்ளார். இதனைக் கவனித்த அக்கம்பக்கத்தினர் விஜயை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த அவர்கள், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில், உயிருக்கு ஆபத்தான நிலையிலிருக்கும் விஜய்க்கு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய போலீசார்,”வாய்த்தகராறுதான் விபரீதத்தில் முடிந்திருக்கிறது. விஜய்யின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். குற்றம்சாட்டப்பட்டிருக்கும் மோஹித் தலைமறைவாகிவிட்டார். அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியிருக்கிறோம்” என தெரிவித்துள்ளனர்.