இமாச்சல பிரதேசத்தில் மேகவெடிப்பு காரணமாக கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், நிலச்சரிவுகள், திடீர் வெள்ளம் ஏற்பட்டு பெரும் சேதம் அடைந்துள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரமுடியாத சூழல் உருவாகியுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் இருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், குல்லு மாவட்டம் அன்னி நகரில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் இடிந்து சேதமாகின. மேலும் இதன் இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், மலையடிவாரத்தில் உள்ள கட்டிடங்கள் சீட்டுக்கட்டுகள் போல் சரியும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதற்கிடையே, இமாச்சல பிரதேசத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.