சென்னை வளசரவாக்கம் அருகே உள்ள ராமாபுரம், பாரதி சாலையில் வசித்து வருபவர் பிரபு என்ற லட்சுமி பிரபாகர் (52). இவர், ராமாபுரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அவர் அளித்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-
நான், சினிமா துறையில் 30 வருடமாக கேமராமேனாக வேலை செய்து வருகிறேன். சூர்யா என்பவர் 2006-ஆம் வருடம் என்னை சந்தித்து பாரதியார் பாடல் ஒன்றை நடிகை பத்மபிரியாவை வைத்து ஒளிப்பதிவு செய்து தருமாறு கேட்டார். அதன்படி நாங்கள் இரண்டு பேரும் ஒன்றாக சேர்த்து பாரதியார் பாடலை ஒளிப்பதிவு செய்தோம். அதன்பின்னர் சூர்யாவும், நானும் நண்பர்களாக பழகி வந்தோம்.
இதற்கிடையில் சூர்யா, நடிகை பத்மபிரியாவின் செல்போன் நம்பரை கேட்டு கடந்த சில மாதங்களாக என்னிடம் தகராறு செய்து வருகிறார். நடிகையின் செல்போன் நம்பரை தராவிட்டால் எனது மனைவியை கற்பழித்து விடுவேன் என்றும், மேலும் ஆபாசமாக திட்டுவதுடன், கொலை மிரட்டலும் விடுத்து வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் கூறி இருந்தார். அந்த புகார் மனுவின் மீது ராமாபுரம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.