நேற்றைய ஆஃப்கானிஸ்தான் – பாகிஸ்தான் போட்டியில் நிகழ்ந்த சுவாரஸியமான சில சம்பவங்கள் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றன. இந்தியாவில் நடைபெற்றுவருவதால் ஒவ்வொரு போட்டியையும் ரசிகர்கள் ஆரவாரத்துடன் கண்டுரசித்து வருகின்றனர். விறுவிறுப்புடன் ஒவ்வொரு போட்டியிலும் வீரர்கள் சாதனைகளை நிகழ்த்திவருவது உள்ளிட்ட ஏதாவது ஒரு சுவாரஸியமா சம்பவங்கள் நிகழ்கின்றன. அந்த வகையில், நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆஃப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையேயான லீக் ஆட்டம் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 282 ரன்கள் சேர்த்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் சிறப்பாக ஆடிய பாபர் அசாம் 92 பந்துகளில் 74 ரன்கள் சேர்த்தார். பாபர் அசாம் அரைசதம் விளாசிய போது, சேப்பாக்கம் மைதானமே அதிரும் அளவிற்கு ரசிகர்கள் கரகோஷம் எழுப்பினர். இதையடுத்து, களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி, 49 ஓவர்களில் 286 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ரஹ்மானுல்லா குர்பாஸ் 53 பந்துகளில் 65 ரன்களும், இப்ராஹிம் சத்ரான் 113 பந்துகளில் 87 ரன்களும் எடுத்தனர். அதேபோல், அடுத்து களமிறங்கிய ரஹமத் ஷா 84 பந்துகளில் 77 ரன்களும், ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 45 பந்துகளில் 48 ரன்களும் எடுத்தனர்.
முன்னதாக பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது அவரின் ஷூ லேஸ் அவிழ்ந்தது. இதனால் ஷூ லேஸை கட்டுவதற்காக பாபர் அசாம், யாரின் உதவியையும் நாடாமல் கைகளில் அணிந்திருந்த கிளவுஸை கழற்றிவிட்டு ஷூ லேஸை கட்ட முயற்சித்தார். இதனை பார்த்து கொண்டிருந்த ஆஃப்கானிஸ்தான் அணியின் மூத்த வீரர் முகமது நபி, அவருக்கு உதவி செய்ய முன் வந்தார். உடனடியாக கால்களை நகர்த்தி அவராகவே ஷூ லேஸை கட்டி கொண்டார். எதிரணியை சேர்ந்த வீரர் என்றாலும் மூத்த வீரர் என்ற மரியாதையுடன் பாபர் அசாம் செயல்பட்ட சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோ ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதேபோல், சென்னை ரசிகர்கள் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமின் மாதிரி ஜெர்சியை அணிந்து ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆதரவு அளித்தது மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.