நடுத்தர வர்க்கத்தினர் பெரிதும் எதிர்பார்த்த வருமான வரி விலக்கு உச்சவரம்பில் எந்தவித மாற்றமும் இல்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். தொடர்ந்து உரையாற்றிய நிர்மலா சீதாராமன், ”வருமான வரி விதிப்பு விகிதங்களில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் தற்போதைய நிலையே தொடரும்” என்றும் அறிவித்தார். இது தொடர்பான அவரது அறிவிப்பில், ”பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் வருமான வரி தாக்கல் நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.
கூடுதலாக செலுத்திய வரியை திரும்பப் பெறுவதற்கான கால அளவு 2013-ல் 94 நாட்களாக இருந்தது. தற்போது அது 10 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் இல்லை. இறக்குமதி வரி உட்பட நேரடி மற்றும் மறைமுக வரியில் எந்த மாற்றமும் இல்லை. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான வரிச் சலுகை மார்ச் 31, 2025 வரை நீட்டிக்கப்படுகிறது. பழைய வருமான வரி வழக்குகள் ரத்து செய்யப்படுகிறது. இதன்மூலம் 1 கோடி வரி செலுத்துவோர் பயன்பெறுவர்” என்றார்.